
Table(toc)
மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறப்பான நாளாகும். இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்.
முன்னோர்களின் ஆசி பெற நீங்கள் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாள் தான் இந்த மகாளய அமாவாசை
அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள்.
இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப் பார்க்கப்படுகின்றது.
அதுவே மூன்று மிக முக்கிய அமாவாசைகளில் ஒன்றான மகாளய அமாவாசை சனிக்கிழமை தினத்தில் வருவது மிகவும் விசேஷமாகப் பார்க்கப்படுகின்றது.
மகாளய பட்சம் எனும் 15 நாட்கள் கொண்ட இந்த புண்ணிய தினத்தின் இறுதியில் வருகின்றது மகாளய அமாவாசை.
பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும்.
மகாளய பட்சம்
மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களைக் குறிப்பதாகும்.
மகாளய அமாவாசை தினத்தில் என்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு செய்தால், அந்த நாள் சிறப்பாக அமைவதோடு, நம் முன்னோர்களின் ஆசி மற்றும் இறைவனின் ஆசி கிட்டுவது நிச்சயம்.
அரசமர இலை
மரங்களில் மிக புனிதத்தன்மை வாய்ந்த மரம் அரச மரம். அப்படி அரச மரத்தடியில் அமர்ந்து காட்சி தருபவர் விநாயகர். இந்த தினத்தில் அரசமரத்தைச் சுற்றி வந்து பிள்ளையாரை வணங்குவது மிகச் சிறந்த புண்ணியத்தைத் தரும். முன்னோர்களின் ஆசி கிட்டுவதோடு, நம் உடலின் நோய் குறைந்து நலம் பெறலாம். நீண்ட நாள் வாழ முடியும்.
உணவளித்தல்
இந்த மகாளய அமாவாசை தினத்தில் எறும்பு, பசு, காகம், நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து அவர்களின் வயிற்றை நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
தானம் அளித்தல்
இந்த மகாளய அமாவாசை தினத்தின் போது கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உப்பு, உடைகள், பார்லி ஆகியவை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிட்டும்.
தண்ணீர் தானம்
தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் என்பார்கள். அதே போல் தண்ணீர் தானமும் பார்க்கப்படுகின்றது. தேவையான மக்களுக்குத் தண்ணீர் தானம் கொடுப்பது, குடிக்க இனிப்பு கலந்த தண்ணீர் கொடுப்பது மிகவும் சிறந்தது. அதோடு சிவ பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பான அம்சம்.
முன்னோர்களை வணங்குவது
இந்த நாளில் நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறந்தது. இதனால் அவர்களின் ஆசி நமக்கு கிடைத்து வாழ்க்கை வளம்பெறும்.
அதோடு ஒரு திறந்த வெளியில் தெற்கு திசை பார்த்து ஒரு விளக்கு அல்லது தீபத்தை பார்த்து வணங்குவது மிகவும் நல்லது. உங்களின் முன்னோர்களை நினைத்து வழிபடுவதும், கடவுளிடம் பிரார்த்திப்பதும் உங்களுக்கு மன நிம்மதியையும், ஆசீர்வாதமும் கிடைக்கும்.
சனி பகவான் வழிபாடு
சனி அமாவாசை தினத்தில் ஏழை எளியோரை ஒருபோதும் நாம் தொந்தரவு அல்லது கஷ்டப்படுத்தக் கூடாது. ஏழை மக்களின் உருவில் சனி பகவான் இருக்கிறார். அவர்களை அவமதித்தால் சனி பகவானால் தண்டிக்கப்படுவீர்கள்.
நாம் அவர்களுக்கு உதவியோ, மரியாதை கொடுத்தாலே போதும் சனி பகவானின் ஆசி கிடைக்கும். மிக புண்ணியமான மகாளய அமாவாசை தினத்தில் நற்காரியங்களை செய்து இறைவனின் அருளும், முன்னோர்களின் அருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.

Your comment will be visible after approval.