Used Car - பழைய கார்களை வாங்கலமா ? வேண்டாமா ?
நீண்ட காலமாக பேச்சு வார்த்தையில் மட்டுமே இருந்த வாகனங்களை அழிக்கும் Scrappage Policy நேற்று அதிகாரப்பூர்வமாக குஜராத்தில் தொடங்கி வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. குஜராத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டில்தான் கார்களுக்கான இந்த Scrappage Policyயை அறிமுகம் செய்திருக்கிறார் மோடி. குஜராத்தில் உள்ள அலாங்க் (Alang)தான் இந்த Vehicle Scrapping–க்கு மையப் புள்ளியாக இருக்கப்போகிறது.
இந்த வாகன அழிப்புக் கொள்கையானது, சாலைகளில் ஓடத் தகுதியற்ற மற்றும் மாசுவை உண்டாக்கும் வாகனங்களையும் நீக்குவதற்கு ஒரு நல்ல திட்டம். இந்த திட்டம் இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சியாகும். சுற்றுச்சூழல் மாசுபாட்டிலிருந்து இந்தியாவை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும் முயற்சி இது. இதன் மூலம் 10,000 கோடி ரூபாய் முதலீடும், பல பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். மேலும் 40% உற்பத்திப் பொருட்களின் விலையை மட்டுப்படுத்தலாம்.
22,000 கோடி மதிப்புள்ள ஸ்டீல்களை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். இங்கே நாமே ஸ்க்ராப் செய்வதால், இறக்குமதி தேவையைக் குறைக்க முடியும். இதன் முதற்கட்டமாக குஜராத்தில் கார்களை Scrapping செய்வதற்கான கட்டமைப்பு வேலைகள் தொடங்கப்படும்’’ என விர்ச்சுவல் தொடக்க விழாவில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.
இதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம், முதல் ஆளாக குஜராத் அரசுடன் கை கோர்த்துள்ளது. அஹமதாபாத்தில் (RVSF) Registered Vehicles Scrapping Facility சென்டருக்கான கட்டமைப்புப் பணிகளையும், இடவசதியையும் தருவதாக ஒப்புதல் தெரிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
Scrappage Policy என்றால் என்ன ?
பழைய கார் வைத்திருப்பவர்கள், Scrappage Policyயை நினைத்து குழப்பத்தில் இருக்கிறார்கள். அப்படியென்றால், பழைய கார் வைத்திருப்பவர்கள், தாங்கள் பாசமாக ஓட்டிய கார்களைக் குப்பையில்தான் போட வேண்டுமா, தற்போதைய சூழலில் பழைய கார் வாங்கலாமா ? வேண்டாமா ?
இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Scrappage Policy மத்திய, மாநில அரசாங்கத்துக்குச் சொந்தமான PSU (Public Sector Undertaking) வாகனங்களுக்கு மட்டும்தான். 2023–ல் இருந்துதான், Heavy vehicle என்று சொல்லப்படும் கனரக வாகனங்களுக்கு Scrappage Policy அறிமுகமாகிறது. தனிப்பட்ட வாகனங்களுக்கு இந்த பாலிஸி 2024 ஜூன் 1-ல் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அதனால் சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் உடனடியாக இதுகுறித்து கவலைகொள்ளத் தேவையில்லை.
ஒரு வாகனம் எப்போது ஸ்கிராப்பேஜ் திட்டத்துக்குள் வரும்?
ஒரு வாகனத்தின் ரெஜிஸ்ட்ரேஷன் சுழற்சி முடிந்ததும் அந்த வாகனம் ஸ்கிராப்பேஜ் திட்டத்துக்குள் வரும். இப்போதைய ரெஜிஸ்ட்ரேஷன் சுழற்சி என்பது தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு 15 ஆண்டுகளாகவும், கமர்ஷியல் வாகனங்களுக்கு 10 வருடங்களாகவும் உள்ளது. ஆனால், மத்திய அரசின் ஸ்கிராப்பேஜ் பாலிசி வாகனத்தின் வயதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதன் Fitness தகுதியைத்தான் அளவுகோலாக வைத்துள்ளது. இது கட்டாய பாலிசி கிடையாது. இது ஒரு வாலன்டியரிங் பாலிசி. அதாவது, நாமாக முன் வந்து வாகனங்களை ஸ்கிராப்பில் போடும் திட்டம். நம் அனுமதியில்லாமல் கார்களை ஸ்கிராப்பில் போட முடியாது.
15 ஆண்டுகள் பழைய கார்களை சாலையில் ஓட்ட முடியாதா என்றால் முடியும். வழக்கம்போல், திரும்ப 5 ஆண்டுகளுக்கான RC-யைப் புதுப்பிக்க FC ( Fitness Certificate ) எடுக்க வேண்டும் என்பதோடு வரிகள் கூடுதலாக கட்டவேண்டும். ஹேட்ச்பேக் கார்களுக்கு Fitness Certificate 5,000 ரூபாய் வரை செலவாகும். சாலை வரி தனி. இதில்லாமல் பசுமை வரி என்று ஒன்று உண்டு. சாலை வரியோடு இதற்குத் தனியாக 15% – 25% வரி கட்ட வேண்டும். டீசல் கார்கள் என்றால், பசுமை வரியின் சதவிகிதம் இன்னும் அதிகமாகும்.
டெல்லி, நொய்டா, பாட்னா, கான்பூர் போன்ற நகரங்களில் ரெஜிஸ்ட்டர் செய்யப்பட்ட வாகனங்களுக்கு 50% பசுமை வரி உண்டு. சென்னை இந்த List ல் இல்லை.
Fitness சோதனையில் தோல்வியடைந்தால்?
Scrappageல் போட மனமில்லாதவர்கள், காரை அரசுக்குச் சொந்தமான ஆட்டோமேட்டட் ஃபிட்னஸ் சென்டர்களில் சோதனைக்கு விட வேண்டும். இந்தச் சோதனையில் பாஸ் ஆனால் மட்டும்தான் காரை சாலையில் தொடர்ந்து ஓட்ட முடியும். முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்தாலும் இரண்டு கூடுதல் டெஸ்ட்கள் நடத்த அனுமதிக்கப்படும். அதிலும் தோல்வியடைந்தால் காரை கட்டாயம் ஸ்கிராப்பில் போடவேண்டும்.
இந்தச் சோதனையில் பாஸ் ஆனால், மறுபதிப்புக்கு டூ–வீலர்கள் என்றால் 1,000 ரூபாயும், கார்கள் என்றால் 6,000 ரூபாய் வரையிலும் செலவாகும். அதாவது, இதற்கு முன்பு இருந்த கட்டணத்தைவிட 21% அதிகம். அதைத் தாண்டி வழக்கம்போல சாலை வரி எக்ஸ்ட்ரா 25%, பசுமை வரி 50 % எல்லாமே உண்டு. டாக்ஸிக்கு 7,000 ரூபாய், ஆட்டோக்களுக்கு 3,500 ரூபாய், பழைய பேருந்து மற்றும் ட்ரக்குகளுக்கு 13,000 ரூபாய் கட்டணம் இருக்கலாம்.
Used Car களை வாங்கலமா ? வேண்டாமா ?
பழைய கார் மார்க்கெட்டைப் பொறுத்தவரை 3-5 வருட பழைய கார்களை வாங்கத்தான் எல்லோரும் ஆர்வம் காட்டுகிறார்கள். 15 வருட பழைய கார்களை எல்லாம் வின்டேஜ் கார் பிரியர்களைத் தவிர வேறு யாரும் வாங்குவதில்லை. அதனால் யூஸ்டு மார்க்கெட்டில் 10 வருடத்துக்கு மேலான கார்களை வாங்கும்போது மட்டும் கவனம் தேவை.
Scrappage Policyயால் கிடைக்கும் நன்மைகள் என்ன ?
பழைய காரைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் இவ்வளவு வரிச்சுமையும், சோதனைகளும் என்கிறது அரசு. கூடவே, ‘‘‘கார்களைத் தாங்களாக முன் வந்து ஸ்கிராப்பில் போடும் வாடிக்கையாளர்களுக்கு 4 நன்மைகள் உண்டு’’ என்றும் சொல்லியிருக்கிறார் மோடி.
- பழைய காரைத் தானாக முன் வந்து ஸ்கிராப்பில் போடும் நபருக்கு, ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அதை வைத்து அவர் புது கார் வாங்கும்போது பதிவுக் கட்டணம் கட்டத் தேவையில்லை. சாலை வரியிலும் கணிசமான தள்ளுபடி உண்டு.
- பழைய கார்களின் பராமரிப்புச் செலவு, ரிப்பேர் செலவு, பெட்ரோல் செலவு போன்றவற்றிலிருந்து விடுதலை பெறலாம்.
- மூன்றாவது – வாழ்க்கை சம்பந்தப்பட்டது. பாதுகாப்பில்லாத, பழைய தொழில்நுட்பங்கள் கொண்ட அந்த கார்களை ஓட்டுவதிலிருந்து விபத்துகளில் இருந்து நம்மைக் காக்கலாம்!
- நான்காவது – சமுதாயம் சம்பந்தப்பட்டது. அதாவது, BS-6 கார்கள் மூலம் மாசற்ற பூமியை உருவாக்கலாம்.
Used Car பிரியர்கள் என்ன செய்யலாம் ?
நன்கு பராமரிக்கப்படும் கிளாசிக் மற்றும் வின்டேஜ் கார்கள் FC ( Fitness Certificate ) டில் பாஸ் ஆனால் அதைத்தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் சரியாகப் பரமாரிக்கப்பட்டு பொக்கிஷமாமாக பார்க்கப்படும் வாகனங்களை இந்த Scrappage Policy கைவிடாது என்கிறார்கள்.



Your comment will be visible after approval.