சைக்கிள்.........!
1985க்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.
கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA.....! அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் போகும்.
இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள்.
ராலி, ஹெர்குலஸ், அட்லாஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" .
அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு.
இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு"விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள்.
அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,,
இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள்.
1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும். ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.
சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.
சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது.
அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது.
இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள்களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி..... இன்னும் ..... அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம்.
1991ம் வருடம் எனது மகன் பிறந்த வருடம் மார்ச் மாதம் வாழ்வாதரம் தேடி புலம்பெயர்ந்து வந்த ஊர்.
தலை சுமை வியாபாரத்துக்கு முற்றுபுள்ளி. ஒரு பிரபலமான சைக்கிள் மார்டில் 1100 ரூ க்கு ஹீரோ சைக்கிள் சிறுதாக சேமித்த பணத்தில் வாங்கினேன்.
(அப்பொழுதெல்லாம் தங்கம் கிராம் 400ரூ விற்ற காலகட்டம் என்மனைவி கழுத்தில் தாலி மஞ்சள் கயிற்றை தவிற வேறு பெரிய நகைகள் இல்லை) தினசரி காலையில் தொடங்கிய வியாபார பயணம் மாலை 3 மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுவேன்.
காலங்கள் கடந்ததது பிள்ளைகள் பள்ளியில் படிக்கும் காலகட்டம் சைக்கிள் பெரும் உதவியாக இருந்தது 9மணிக்கு ஸ்கூலில் விடவும் மாலை 4 மணி ஸ்கூலில் இருந்து அழைத்து வரவும் நேரம் சரியாக இருந்தது.
வாரம் ஒருநாள் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சினிமாவாக்கு செல்வது வழக்கம் சின்னதம்பி, மல்லுவேட்டி மைனர், பாண்டித்துரை 90 'ல் வந்த நல்ல படங்கள் அனைத்தும் பார்த்து விடுவோம். சைக்கிள் முன் கேரியரில் குழந்தைகள் அமரும் கூடையில் மகளை அமர்த்தி மனைவி மகனை மடியில் வைத்து 3, 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் திரையரங்குக்கு செல்வோம்.
அப்பொழுது அண்ணாமலை 1992 படம் ரிலீஸ் ஆன நேரத்தில் எங்கள் பக்கத்து வீட்டார் வைத்த எங்களுக்கு பெயர் அண்ணாமலை சைக்கிள்.
அண்ணாமலை சைக்கிள் கிளபிச்சுடோய் என்பார்கள்.
1998 வரை 7 ஆண்டு பயணம் வாழ்வின் முதல் ஆதாரம் சைக்கிள்.
1998 ம் ஆண்டு டிவிஸ் சாம்ப் அப்புறம் எம்80 என இரு சக்கர ஓட்டம் தொடங்கியது.
சேமிப்பின் ஆரம்பம் பிள்ளைகள் வளர வளர உழைப்பும் கடுமையானது வெளியூர் வியாபாரத்துக்கு போனால் பெரிய பெரிய ஹோட்டலில் எல்லாம் சாப்பிட மாட்டேன்.
எங்க விலை கம்மியா இருக்குமோ அங்கதான் தேடித்தேடி சாப்பிடுவேன்.
அதில காச மிச்சப்படுத்தி பிள்ளைகளுக்கு தீனி வாங்கி வருவேன்.
இப்பவும் அப்படித்தான் மிகப்பெரிய அதிக விலைவாசியுள்ள உணவங்களை நிராகரிப்பேன் பசங்கதான் எப்பவோ ஒருவாட்டிதானே சாப்பிடறீங்கனு வலுகட்டயமா கூட்டிட்டு போவங்க
நாம செஞ்ச ஒவ்வொரு விஷயங்களும் நினைவலைகளாக மனசுல ஓடிகிட்டுதான் இருக்கு.
எப்படி ஆயினும். பழைய நினைவுகள் ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தான் தருகின்றன.
வாழ்வே மாயம், இந்த உலகே மாயம்.

Your comment will be visible after approval.